பசும்பொன்னில் புறவாசல் வழியே எடப்பாடி ஓடி வந்த நிகழ்வே சாட்சி: மருது அழகுராஜ் விளாசல் ..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சுமார் 2 லட்சத்து 86 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றதால் ஆளும் கட்சி ஆக முடியாமல் போனது என்றால்…
இப்போது புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்திற்கு பிறகு, சுமார் 3 சதவீத பிராமணர்கள் வாக்கு பா.ஜ.க.வை நோக்கி முழுவதுமாக நகர்ந்து விட்டநிலையில்..
எடப்பாடி தனது துரோகத்தாலும், சாதிய வன்மத்தாலும் சுமார் ஒரு கோடிக்கும் மேலான முக்குலத்தோர் வாக்குகளையும் இழக்கும் சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது.
இதற்கு பசும்பொன்னில் புறவாசல் வழியே எடப்பாடி ஓடி வந்த நிகழ்வே சாட்சி.
இது மட்டுமல்லாமல் எடப்பாடியின் சமச்சீர் இல்லாத அரசியலால் மேற்கு மண்டலத்தில் அருந்ததியர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகளும் அ.தி.மு.க.வை கைகழுவ தொடங்கி விட்டன.
இதற்கு, பத்தாவது சுற்றில் கட்டுத்தொகை காப்பாற்ற முட்டி போட்டு முழி பிதுங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலே ஒரு சாட்சி.
ஆனால், இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு பொது அறிவும், பொதுவாகவே அறிவும் இல்லாதவராகவும்,
கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழாரே என்று நம்பும் அளவுக்கு தற்குறியாகவும், கட்சி பெயரில் உள்ள திராவிடம் என்பதற்கு கூட அர்த்தம் தெரியாத கூமுட்டையாகவும்,
ஆக, மொத்தத்தில் தலைமைத் தகுதி என்பதே கடுகளவும் இல்லாத எடப்பாடிக்கு மேற்படி உண்மைகள் எல்லாம் எப்படி புரியும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.