இது, பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது.ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்கின் கைதும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத்துறை வெளிப்படைத்தன்மையோடும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளதை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது. ஆனால், சட்டத்தையும் மக்களாட்சியையும் துச்சமாக மதித்துச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பாஜக அஞ்சி நடுங்குவது இதன் மூலம் நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.