பெருந்தலைவர் காமராஜருக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை அரசின் சார்பில், சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதும் காமராஜரின் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழச்சி தங்கபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் மற்றும் உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள்.
காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று காலை கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.