இரண்டு மேம்பாலங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
சென்னையில் கோயம்பேடு, வேளச்சேரி பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே சென்றது.
இதனைக் கருத்தில் கொண்டு, வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் பகுதியில், இரு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.
1 கி.மீ. தூர மேம்பாலம் :
இதேபோல், கோயம்பேடு பஸ் நிலையம் முன்பும் ரூ.93 கோடி செலவில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.
கொரோனா காரணமாக, மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்தப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, இப்போது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில், நேரில் சென்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.
முதலில் வேளச்சேரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு 2 அடுக்கு மேம்பாலத்தின் மேல் பகுதியை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலம் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலையை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து நெரிசல் குறையும் :
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்பேடு சென்றார். அங்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எ.வ. வேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, ஹசன்மவுலானா மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த இரு மேம்பாலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு, வேளச்சேரி பகுதிகளில் வாகனங்கள் நெரிசல் இன்றி, எளிதில் கடந்து சென்றன.
தினமும் காலை- மாலை நேரங்களில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல், இனி பெருமளவு குறையும்.
*