உதயநிதி பேசியதை வரவேற்கிறோம் : பா.ரஞ்சித்

By 
para1

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "சனாதான ஒழிப்பு மாநாடு, சனாதான கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை வரவேற்கின்றோம்! காலங்காலமாக இச்சமூகத்தில் சனாதான கொள்கையான சாதிய படிநிலை ஒடுக்குமுறையை ஒழித்து சமூக சமத்துவத்தை நிலைநிறுத்த போராடியவர்களின் வரலாறு உள்ளது.

புத்தர், பண்டிதர் அயோத்தி தாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் சாட்சியமாக உள்ளார்கள். இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமதர்ம ஆட்சிமுறை அமைய, பகுத்தறிவு மலர, உண்மை மதச்சார்பின்மை ஓங்க பாபாசாகேப் அம்பேத்கரின் பெளத்தம் தத்துவம் உள்ளது. பெளத்தமே சனாதானத்தை ஒழிக்கும். சனாதான கொள்கையை ஒழித்து சமூக ஜனநாயகத்தை உருவாக்குவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Share this story