மன்னிப்பு கேட்க மாட்டேன் : அண்ணாமலை உறுதி

பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க.வின் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை.
எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானமே எனக்கு முக்கியம். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க பேசிய கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.
மது வேண்டாம் என்றவர் அண்ணா. ஆனால் மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவை பற்றி நான் தரக்குறைவாக எங்கேயும் விமர்சித்தது இல்லை.
நாளை அ.தி.மு.க தலைவர்களை பார்க்கும்போது அதே மரியாதையோடு தான் பழகுவேன். எனக்கும் அ.தி.மு.க தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் கிடையாது. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாற்று ரீதியாக நடந்த விஷயத்தை நான் பேசினேன். அதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.