பலமான வீரராக ரோகித் சர்மா திரும்பி வருவார் : முன்னாள் கிரிக்கெட் வீரர் நம்பிக்கை

By 
rohits1

ரோகித் சர்மா செய்த தவறை திருத்திக் கொண்டு, சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மணிந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கூறியதாவது:- 

கேப்டனாக நீங்கள் அணியில் ரன் அடிக்கவில்லை என்றால், உங்களுக்கு அணியை வழிநடத்துவதில் சிரமம் ஏற்படும். கேப்டன் தனது சொந்த செயல்பாட்டை குறித்து யோசிக்க மாட்டார்கள். அணியை பற்றி தான் யோசிப்பார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். 

ஆனால் கேப்டன் சரியாக விளையாடவில்லை என்றால், அது நிச்சயம் மனதளவில் பாதிக்கப்படும். அணியை கையாளும்போது சிரமம் ஏற்படும். டி20 உலக கோப்பை தொடரிலும் ரோகித் சர்மாவுக்கு இந்த பிரச்சனை தான் ஏற்பட்டிருக்கும். 

டி20 உலக கோப்பைத் தொடர் முடிந்தவுடன் அவருக்கு கிடைத்த ஓய்வில் பேட்டிங்கை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா நிச்சயம் யோசித்து இருப்பார். பேட்டிங்கில் நாம் என்ன தவறு செய்கிறோம். எதனை மேம்படுத்த வேண்டும் என அவர் நிச்சயம் பயிற்சி செய்திருப்பார். 

ரோகித் சர்மா இன்னும் நிறைய ஆண்டு கிரிக்கெட் விளையாடுவார். அவர் எப்போதுமே ஆட்டத்தை தனி ஆளாக மாற்றக் கூடியவர். வங்கதேச தொடரில் ரோகித் சர்மா நிச்சயம் பலமான வீரராக திரும்பி வருவார். இன்னும் உலக கோப்பைக்கு ஒரு ஆண்டுதான் இருக்கிறது. அதில் ரோகித் சர்மா உடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

நிச்சயம் அவர் உலகக் கோப்பையில் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நாட்களை காண நான் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன் என்று மணிந்தர் சிங் கூறியுள்ளார். 

மணிந்தர் சிங் இந்தியாவுக்காக 35 டெஸ்ட் போட்டிகள் 59 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 154 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story