டிஎன்பிஎல் கிரிக்கெட் : மதுரை மிரட்சி : நெல்லை மிரட்டலாய் 4-வது வெற்றி.. ஆடுகள விவரம்..
 

By 
nellai rayol

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. 

நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதிரடி ஆட்டம் :

அதன்படி, முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார். 

இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் பாலச்சந்தர் அனிருத் ஒரு ரன்னுடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 

தொடர்ந்து விளையாடிய அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் சதுர்வேதி 27 ரன்னுக்கு அவுட்டானார். ஜெகதீசன் கவுசிக் 21 ரன்கள் அடித்தார். 

4-வது வெற்றி :

20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது. இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. 

இது, நெல்லை அணி பெறும் நான்காவது வெற்றியாகும்.
*

Share this story