தடகள வீரர் உள்பட 6 பேருக்கு கொரோனா : ஒலிம்பிக் அமைப்பாளர்கள் திணறல்..
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
6 பேர் பாதிப்பு :
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்று உள்ள ஒரு தடகள வீரர் மற்றும் ஐந்து ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் ஒலிம்பிக் போட்டி வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹமாமாஸ்து நகரில் ஒரு ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சவாலான பணி :
ஜூலை 1 முதல் ஜப்பானுக்குள் நுழைந்த 8,000 -க்கும் மேற்பட்டவர்களிடையே இதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றாலும், இந்த பாதிப்புகள் போட்டி அமைப்பாளர்களுக்கு முன்னால் உள்ள சவால்களை காட்டுகின்றன. இருப்பினும், தடுமாற்றம் ஏற்பட்டாலும் சமாளித்து களத்தை நடத்துகின்றனர்.
ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு தடகள வீரர், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஒரு விளையாட்டு ஊழியர் உள்பட ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு பேரின் அடையாளம் குறித்து அவர்கள் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.
அவசரநிலை பிறப்பிப்பு :
டோக்கியோவில் தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.
நகரத்தில் நேற்று மட்டும் 1,149 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.