கிரிக்கெட் டுடே: ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் குவித்து மிரட்டல்; இங்கிலாந்து மிரட்சி..

ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
அதில், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹீம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தப் போட்டியில் குர்பாஸின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் குவித்தது. இதில், ஜத்ரன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 3 ரன்களில் வெளியேற, குர்பாஸ் 57 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு அஷ்மதுல்லா உமர்சாய் 19 ரன்களிலும், கேப்டன் ஹஷ்மாதுல்லா ஷாஹிடி 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முகமது நபி 9 ரன்களிலும், ரஷீத் கான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தப் போட்டியில் களமிறங்கிய இக்ரம் அலிகில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்களிலும், நவீன் உல் ஹக் 5 ரன்களிலு வெளியேறவே ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலமாக, இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் 2ஆவது முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவிற்கு எதிராக 272 ரன்கள் எடுத்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 247 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 288 ரன்களும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் அடில் ரஷீத் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன், ரீஸ் டாப்லே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.