உலகக்கோப்பை கிரிக்கெட் வெற்றி: வன்மக்கும்பலின் ஆபாச வார்த்தைகள்; பின்னணியில் யாரு?

By 
xc

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பத்தினரைப் பற்றி விஷமிகள் மோசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி, கோப்பையைக் கோட்டை விட்டது. இதனால், அதிருப்தி அடைந்த வன்ம கும்பல் சமூக வலைத்தளங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பற்றி மோசமாக வசைபாடி வருகின்றனர்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்கை நோக்கி சேஸ் செய்த ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது.

இதன் மூலம், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா மைதானத்தில் இருந்த 1.30 லட்சம் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள 6வது உலகக் கோப்பை ஆகும். இந்த வெற்றியை அந்த அணியின் வீரர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்கள் மீது இந்தியாவைச் சேர்ந்த விஷமிகள் சிலர் வன்மத்தைக் கக்கத் தொடங்கியுள்ளனர்.

வீரர்களைத் திட்டுவதுடன் நிறுத்தாமல் குடும்பத்தினரையும் ஆபாசமாகப் பேசி வசைபாடி வருகின்றனர். இறுதிப்போட்டியில் ஆஸி அணியின் வின்னிங் ஷாட்டை அடித்தவர் கிளென் மேக்ஸ்வெல். இவரது மனைவி வினி ராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2013 முதல் நண்பர்களாக இருந்து, கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், வன்மத்தைக் கொட்டும் சிலர் வினி ராமன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் அவர் இப்படிச் செய்யலாமா என்றும் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் மிரட்டல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். சிலர் வினி ராமனுக்கு பாலியல் ரீதியாகவும் மிரட்டல் விடுத்தும் பதிவிட்டுள்ளனர்.

இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற டிராவிஸ் ஹெட்டையும் இந்த விஷமிகள் விடவில்லை. அபாரமாக ஆடி சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த அவரை இன்ஸ்டாகிராமில் வறுத்தெடுத்து வருகின்றனர். அவரோடு நிறுத்தாமல் அவரது குடும்பத்தையும் டார்கெட் செய்து திட்டுகின்றனர்.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அணியினர் மீது சமூக வலைத்தளங்களில் விஷமத்தனமான தாக்குதலை நடத்துவது தவறான செயல் என்று சிலர் அட்வைஸ் கொடுக்கின்றனர்.

Share this story