டோனிக்காக, ரோகித் சர்மா இதனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் தான் நாளை 15ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு ஏற்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்பதை ஐசிசி உறுதி செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில், நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் குவித்தது. பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 3 வீரர்களும் தலா 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து, 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியானது 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசியாக எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரவீந்திர ஜடேஜாவும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக 2 ரன்கள் ஓட முயற்சித்த தோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
கடைசியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், தான் இந்தியாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும். அப்படி முன்னேறி சென்றால், தோனிக்கு செய்யும் மரியாதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது பெரிதல்ல. நாளை நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.