தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..
தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொகாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேசிய துப்பாக்கிச் சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), மொகாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரத்த வெள்ளம் :
துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டதும், குடும்ப உறுப்பினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது :
நமன்வீர் சிங், தனது அறையில் அதிகாலை 3:35 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார்.
நமன்வீர், தனது உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்' என்றார்.
தங்கப் பதக்கம் :
பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான பிரார், இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
அவர் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
சமீப காலமாக, இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.