ஆப்கானிஸ்தானில் தனது குடும்பம் : செய்வதறியாது கவலையில் கிரிக்கெட் வீரர்..
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் விளையாடுவோம்' என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில், தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால், அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால், ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், 'ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம்.
தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.