ஆர்சிபி உரிமையாளராக நான் இருந்திருந்தால், இதைச் செய்திருப்பேன் : லாரா கருத்து
நடப்பு ஐபிஎல் போட்டியோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக, விராட்கோலி அறிவித்திருந்தார்.
இதில், ஐபிஎல் கோப்பையுடன் வெளியேற இருந்த அவரது கனவு தகர்ந்தது.
எலிமினேட்டர் ஆட்டத்தில், கொல்கத்தாவிடம் தோற்றதால், ஐ.பி.எல். கோப்பையை விராட் கோலியால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பெங்களூர் அணிக்காக தான் கடைசிவரை விளையாடுவேன் என்று அவர் கொல்கத்தாவுடன் மோதிய போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.
லாரா கருத்து :
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் பிரைன் லாரா இது தொடர்பாக கூறியதாவது :
'நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால், கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன்.
ஏனென்றால் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இருவேறு நபராக நான் பார்க்கிறேன்.
மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் கீழ் ஆடுவதை, நான் பார்க்க விரும்பவில்லை.
கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
மாறுபட்ட அணி :
அதனால் தான் சொல்கிறேன், நான் உரிமையாளராக இருந்தால், மீண்டும் ஒருமுறை முற்றிலும் மாறுபட்ட அணியை உங்களது (கோலி) தலைமையில் அமைத்து விளையாடுவோம் என்று சொல்வேன்.
பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்' என கூறியுள்ளார்.