பாரா ஆசிய விளையாட்டு: 82 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை..

By 
para2

சீனாவின் ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்றைய ஆட்டங்களின் முடிவில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் என 82 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 8-வது இடம் வகித்தது. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிகஅளவிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும்.

இதற்கு முன்னர் இந்தோனேஷியாவில் கடந்த 2018-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில்அதிகபட்சமாக இந்தியா 72(15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம்) பதக்கங்களை வென்றிருந்தது. இம்முறை 2 நாட்கள் போட்டி இன்னும் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இந்தியா 82 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்சோ பாரா ஆசிய விளையாட்டு போட்டியின் 4-வது நாளான நேற்று ஆடவருக்கானகுண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில்இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.03 மீட்டர் தூரம் எறிந்துதங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ரோஹித் குமார் (14.56 மீட்டர்) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் ஆர் 6 கலப்பு 50 மீட்டர் ரைபிள் புரோன் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் சித் தார்த்தாபாபு 247.7 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

வில்வித்தையில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஜோடி 151-149 என்ற கணக்கில் சீன அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.

Share this story