உலக டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்?
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில், பெண்கள் இரட்டையர் பிரிவில், கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் மனிகா பத்ரா-அர்ச்சனா காமத் ஜோடி ஹங்கேரியின் டோரா மடாராஸ்-ஜியார்ஜினா போடா ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியில், மனிகா பத்ரா-அர்ச்சனா காமத் ஜோடி 11-4, 11-9, 6-11, 11-7 என்ற செட் கணக்கில் டோரா மடாராஸ்-ஜியார்ஜினா போடா இணையை தோற்கடித்து கால்இறுதியை எட்டியது.
கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனிகா பத்ரா-ஜி.சத்யன் (தமிழ்நாடு) இணை சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்து 15-17, 10-12, 12-10, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கனாக் ஜா (அமெரிக்கா)-வாங் மான்யு (சீனா) ஜோடியை போராடி வீழ்த்தி, கால்இறுதிக்குள் நுழைந்தது.
கால்இறுதி தடையை இந்திய ஜோடிகள் கடந்தால், குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து விட முடியும்.