10 ஆண்டு சிறைத்தண்டனை கடந்தவர்களுக்கு விடுதலை : அமைச்சர் ரகுபதி தகவல்
தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், முதலமைச்சர் அறிவித்தபடி, விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
திருச்சி, மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் ரகுபதி கூறியதாவது :
திருச்சி மத்திய சிறையில், தண்டனை பெற்ற சிறைவாசிகள் 1,517 உள்ளனர் .
இந்தியாவிலேயே ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி இரு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது. ஒன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூர். அடுத்தபடியாக, நமது திருச்சி சிறைச்சாலை. சிறைக் கைதிகள் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக திமுக அரசு உள்ளது.
சிறைக் காவலர்களின் கூடுதல் பணி நேரத்திற்கான படி ரூ.200-க்கு மேல் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை, அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுவிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதில், சிக்கல் ஏதுமில்லை, குறிப்பிட்டபடி விடுவிக்கப்படுவர்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் பட்டியலை தயார் செய்து வருகிறோம்.
பட்டியல் தயாரிப்பு பணி முடிய, இன்னும் 20 நாட்கள் ஆகலாம்.
குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வாய்ப்பு இல்லை.
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதை, அவரது லட்சியமாக வைத்துள்ளார்.
அவர்களை விடுதலை செய்ய அரசு முழு முயற்சி எடுக்கும்' என்றார்.