ரயில் விபத்தில் 57 பேர் பரிதாப பலி : மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்..

கிரீஸ் நாட்டின் ஏதென்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 350 பயணிகளுடன் ரெயில் சென்றது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது. இந்த கோர விபத்தில் 57 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்நிலையில், கிரீஸ் ரெயில் விபத்தில் பலியானோருக்காக அந்நாட்டு பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மிஸ்டோடாகிஸ் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன். இது துயரமான மனித தவறு ஆகும் என பதிவிட்டுள்ளார்.