சட்ட ஆணையத்துக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

By 
letter

பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. தரப்பு கருத்தை கடிதமாக சட்ட ஆணையத்துக்கு அளித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தி.மு.க. எம்.பி. வில்சன் இதுதொடர்பான கடிதத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் நேரடியாக அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.

இதன்பின்பு சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த இயலவில்லை. 6, 7, 9, 11, 12 மற்றும் 13-வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த முடியாமல் போனது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி கவர்னரும் ஆட்சியை கலைக்கலாம்.

ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது.

Share this story