விரைவில், 4,318 பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By 
ma.su1

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைக்கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :

'தாளவாடி ஆஸ்பத்திரியில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கடிதம் தந்துள்ளார்கள். 

அது குறித்தும் சென்னைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க செய்யப்படும். 

தமிழகத்தில், மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காக்கும் திட்டம், தொலைதூர மருத்துவ சேவை, 2025-க்குள் காச நோய் இல்லாத தமிழகம் இப்படி பல திட்டங்களை முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 

அந்த வகையில், தொழு நோய் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர புன்னகை என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஒரு மலை கிராமத்தில் படித்த பெண் ஒருவருக்கு கம்ப்யூட்டர் வாங்கி கொடுக்கப்பட்டு அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பெண்ணின் மூலம் வழங்கும் வகையில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

ஈரோட்டை பொருத்தவரை 45 மலை கிராமங்கள் உள்ளன. இந்த 45 மலை கிராமங்களிலும் புன்னகை திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். 

இதன் மூலம் அந்தந்த மலை கிராமங்களுக்கு இணையதள வசதி, படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த இளைஞர் மருத்துவர்களோடு பேசி அந்த மலை கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடியும். 

முதல்-அமைச்சர் கவனத்திற்கு இதுகுறித்து கொண்டு செல்லப்பட்டு தேவையான நிதி ஆதாரம் பெறப்படும். கரு முட்டை தானம் என்பது சட்டபூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 21 வயது முதல் 35 வயதுக்குள் பெற்றெடுக்கிற தாயின் கரு முட்டை கொடுக்கிற வகையில் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இங்கு நடந்த 16 வயது இளம்பெண்ணிடம் 6 மருத்துவமனை தொடர்ச்சியாக கருமுட்டை எடுத்துள்ளனர். 

இதில் தமிழ்நாட்டில் 4 மருத்துவமனை மற்ற 2 ஆந்திரா, கேரளாவில் உள்ளது. இது தொடர்பாக நமது துறையின் செயலாளர் அந்தந்த செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக மருத்துவமனைகள் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

தமிழகத்தில் போலி மருந்து, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மருத்துவத்துறையில் விரைவில் 4,318 பணியிடங்கள் நிரப்பப்படும்' என்றார்.
*

Share this story