கிரிக்கெட் ஆடிய சிறுவர்கள் : துப்பாக்கியால் சுட்டார் அமைச்சரின் மகன்.. தாக்குதல்-பரபரப்பு

By 
Boys playing cricket Minister's son shot .. Attack-sensation

பீகார் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயாண் பிரசாத்தின் மகன், தோட்டத்தில் விளையாடிய சிறுவர்களை விரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில், பா.ஜ.கவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். 

இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த அமைச்சரின் மகன் பப்லு குமார் அவர்களிடம் கடுமையாகப் பேசி உள்ளார். 

தகராறு :

அப்போது பப்லு குமாருக்கும், சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுவர்களை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர்களைத் தாக்கியும் உள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், 'சிறுவர்கள் சிலர் இங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். 

திடீரென்று அங்கு வந்த நான்கைந்து நபர்கள் சிறுவர்களை அடிக்கத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் அமைச்சரின் மகன் ஆவார்' என்று கூறினார்.

கிராம மக்கள் தாக்குதல் :

இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோவில், அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் தாக்குவது பதிவாகி இருந்தது. அமைச்சர் மகனுடன் வந்திருந்த அவருடைய உறவினர் மற்றும் சில நெருக்கமானவர்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில், சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அமைச்சரின் வீட்டுக்கு சென்று, அவரது காரை அடித்து நொறுக்கினர். மேலும், பப்லுவையும் சரமாரியாக தாக்கினர். 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமைச்சர் விளக்கம் :

இதுகுறித்து அமைச்சர் நாராயண் பிரசாத் கூறியதாவது, 'எனது நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் முயன்றனர். எனது குடும்பத்தினரை தாக்கினர். 

அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். 

அவரையும் பொதுமக்கள் கற்களால் தாக்கினர். எனது வாகனத்தையும் சேதப்படுத்தினர்' என்று கூறினார்.

கடும் கண்டனம் :

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான ராஷ்திரிய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

'பீகாரில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுகின்றனர். 

கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை தாக்க அமைச்சரின் மகனுக்கு யார் உரிமை தந்தது? சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறும்போது மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்துவார்கள்?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story