சென்னை மாநகராட்சிக்கு, ஐகோர்ட் சரமாரி கேள்வி..
சென்னை உயர்நீதிமன்றத்தில், சாலை அகலப்படுத்துவது தொடர்பாக, பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சாலை அகலப்படுத்துவதில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முறையான வசதிகளை ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.
வெள்ளத்தில் சென்னை :
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரண்டு நாட்களாக பெய்த கனமழையில், சென்னை மீண்டும் தத்தளிப்பது ஏன்? என்று தலைமை நீதிபதி சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், 2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின்போது, ஏற்பட்ட அனுபவத்தை பாடமாகக் கொண்டு வரும் எதிர்கால பருவமழையை சமாளிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்கியது ஏன்? 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு, சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
பொதுநல வழக்கு :
பெருவெள்ளத்திற்கு பிறகு, 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால், தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடரப்படும் என்றும் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
*