முதல்வர் மம்தா பானர்ஜி, எம்எல்ஏ ஆக இன்று பதவியேற்றார்
மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இதில், திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. என்றாலும், மம்தா பானர்ஜி நந்தி கிராமம் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக தோல்வியடைந்தார். இருந்தாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனால், ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான், பவானிபூர் இடைத்தேர்தல் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். கடந்த 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா வேட்பாளர் பிரியங்காவை 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோற்கடித்தார்.
வெற்றி பெற்ற மம்தா 7-ந்தேதி (இன்று) சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மம்தா பானர்ஜி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மேலும் இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கார் கலந்து கொண்டனர்.