சமையல் எண்ணெய்யில் கலப்படம் அதிகரித்து வருகிறது : அமைச்சர் புகார்
சோயா உற்பத்தி தொடர்பான சர்வதேச மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது :
'சமையல் எண்ணெய்களில் பாமாயிலை கலப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சோயா எண்ணெய் போன்றவற்றில் பாமாயிலை கலக்கிறார்கள்.
சோயா எண்ணெய்யில் 40 சதவீதம் வரை பாமாயில் கலக்கப்படுகிறது. இது தொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எண்ணெய் கலப்படத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
சில எண்ணெய் பாக்கெட்களில் வேறு எண்ணெய் கலந்தால், அதுபற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால், அந்த எழுத்துகளை கண்ணுக்கு தெரியாத சிறிய எழுத்தாக பதிவு செய்கிறார்கள். இதை மக்கள் யாரும் படித்துப் பார்ப்பது இல்லை.
எனவே, வேறு எண்ணெய் கலக்கக்கூடிய பாக்கெட்களில் அதுபற்றிய குறிப்புகள் கொட்டை எழுத்துகளில் இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு தேவையான சமையல் எண்ணெய்யில் 65 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். சோயா பீன்சில் இருந்து எண்ணெய் தயாரிக்கலாம்.
எனவே, இந்தியாவில் சோயா பீன்சின் உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க வழி ஏற்படுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக தொழில் கூடங்களும், ஆராய்ச்சி அமைப்புகளும் தேவையான பணிகளை செய்ய வேண்டும்.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களுக்கு எதிர்ப்பு உள்ளது.
ஆனால், நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய்கள் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம்தான் உருவாக்கப்படுகிறது' என்றார்.