ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வுப் பணி : கனிமொழி தொடங்கி வைத்தார்
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் நடந்தது.
பின்னர், ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பிலும், தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வருடமும், இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், 17 ஆண்டு களுக்கு பின்னர் மத்திய தொல்லியல்துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.
அகழாய்வுப் பணியை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளனர். அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது.
பின்னர், கனிமொழி எம்.பி. கூறியதாவது :
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 17 கோடி போதுமானதாக இருக்காது.
எனவே, மத்திய அரசு இந்த தொகையை உயர்த்தும் என நம்புவோம்' என்றார்.