காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் : முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார்.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்தனர்.
காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்துள்ளது தெரிய வந்ததால் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதில் திட்டத்தின் பணிகளை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அளவில் ஒரு ஆசிரியரை பொறுப்பு அலுவலராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தை இப்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.