ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 5 பேர் பரிதாப பலி..

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் மழை நீடித்தது. ஆறுகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று பகலில் மிதமான மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு நேற்று 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பழையாறு, கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு உட்பட மாவட்டத்தில் உள்ளஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுசீந்திரம் சோழன்திட்டை தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழை, மரவள்ளி, தென்னை, ரப்பர் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும், மலைப் பயிர்களும் சேதமடைந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 3 நாளில் 10 அடியாக உயர்ந்துள்ளது. மழை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை நீர்ஆதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மாங்காடு - முஞ்சிறை சாலையில்தண்ணீர் தேங்கியுள்ளது. திக்குறிச்சியில் குடியிருப்புகளையும், குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் இறந்தார்.
ஆற்றூர் பகுதியில் மழை பாதிப்பால் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி இறந்தார். இதனால் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.