மாணவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு முக்கிய அறிவுறுத்தல்..

பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலைக் கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும் தர வரிசையில் முதலிடம் பெற்ற 108 மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்றவர்களுக்கும், இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது அவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம். நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியம் இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் சொல்லப்பட்ட அறிவார்ந்த கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கிய மாபெரும் பக்தி மரபு, மகான்களால் வடக்கே கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாட்டு கோவில்களின் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு. இளம் மாணவர்கள் உங்களிடம் உள்ள அபரிமிதமான வளமான கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் 21-ம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவு சமூகத்தில் முக்கிய குடிமக்களாக மாற வேண்டும்.
இந்த பல்கலைக்கழகத்திலும் அதன் இணைப்புக் கல்லூரிகளிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பெண்கள் கல்வி பயில்வதன் மூலம், நாடு முன்னேற்றம் அடையும். படித்த பெண்கள் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும்.
பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை பெற முடியும். 1857-ம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கல்வி அறிவைப் புகட்டுவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றுகிறது. இது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது. 165 ஆண்டுகளுக்கும் மேலான அதன் பயணம் முழுவதும் கல்வியாளர்களின் உயர் தரத்தை கடைபிடித்துள்ளது. அறிவுசார்ந்த ஆர்வத்தையும், விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் சூழலை வழங்குகிறது.
எண்ணற்ற அறிஞர்கள், தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை உருவாக்கி, கற்றலின் தொட்டிலாக இருந்து வருகிறது. உலகளாவிய சூழலில் கல்வியில் அவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னை பல்கலைக்கழகம் ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டு, இந்தியாவின் தென்மண்டலத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவின் 6 முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக பயின்றது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்.
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆவார்.
இங்கு பயின்ற சர் சி.வி. ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர், நோபல் பரிசு பெற்றவர்கள். இவர்கள் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இங்கு பயின்று இந்தியாவின் 2 தலைமை நீதிபதிகள், நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி மற்றும் நீதிபதி கே. சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையின் துறையை வளப்படுத்திஎள்ளனர். சென்னை பல்கலைக்க ழகம் அத்தகைய சிறந்த அறிஞர்களை உருவாக்கி உள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறந்து விளங்குவதற்கு உங்களை கடினமாக உழைக்கச் செய்ய வேண்டும்.
இந்தியாவின் நைட்டிங் கேல் ஸ்ரீமதி, சரோஜினி நாயுடு மற்றும் துர்காபாய் தேஷ்முக். ஆகியோரும் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களே. சென்னை பல்கலைக் கழகத்தின் அனைத்து மாணவ-மாணவிகளும் இதன்மூலம் சிறப்பு உத்வேகத்தைப் பெற வேண்டும். கடந்த மாதம், கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் நன்கொடைகளை வழங்கிய பல்வேறு கல்வி நிறுவனங்களின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுடன் நான் உரையாடினேன். கல்வி மற்றும் சமூகத்திற்காக பங்காற்றிய முன்னாள் மாணவர்களையும் பயனாளிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்தச் சூழலில், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய சிறந்த மையமாக அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும்.
என் மனதில் பட்ட ஒன்றை சொல்ல விரும்புகிறேன். போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அழுத்தம், நல்ல கல்வி நிறுவனங்களில் சேரவில்லையே என்ற பயம், மதிப்புமிக்க வேலையில் இறங்கவில்லையே என்ற பதட்டம், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை போன்றவை நம் இளைஞர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நமது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவதற்கும் நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைவது முக்கியம். எந்தவொரு கவலையும் உங்களை மூழ்கடிக்க வேண்டாம் என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். சில நேரம் அது தாமதம் ஆகலாம். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.
உறுதியுடனும் அச்சமின்மையுடனும் உங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உங்களால் முடியும். எதிர்காலம் உன்னுடையது. இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். இந்த விழா மூலம் சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்ற 1 லட்சத்து 4 ஆயிரத்து 416 பேர் பட்டம் பெற்றனர்.