பள்ளிகளைத் திறக்க, தமிழக அரசு ஆலோசனை..
 

By 
Government of Tamil Nadu advises to open schools ..

கொரோனா 3-வது அலை செப்டம்பர், அக்டோபரில் தாக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால், பள்ளிகளைத் திறப்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

கோரிக்கை :

தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து இருப்பதால், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? படிப்படியாக வகுப்புகளை தொடங்கலாமா என்பது குறித்து சுகாதார வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளி கல்வி ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

கல்விக் கட்டணம் :

இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 16-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடத்தப்படுகிறது. இதில், பிளஸ்-2 வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டணம் குறித்த புகார்கள், அங்கீகாரமின்றி செயல்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், கடந்த ஆண்டின் மாணவர்கள் சேர்க்கை விவரம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் 11,12 வகுப்புகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அத்துடன் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளின் கருத்து கேட்கப்படுகிறது. 

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நிலைமைகள் குறித்து கேட்டறியப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு, உயர்கல்வி அதிகாரிகள் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளை கேட்டறிய உள்ளனர்.

இறுதிக்கட்ட ஆலோசனை :

அதன் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர்  ஆகியோருடன் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார்.

22-ந்தேதி அல்லது அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு :

இதற்கிடையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பள்ளிகளைத் திறக்க வலியுறுத்துகின்றனர். 

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்பும் அதிகமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

Share this story