வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணி : அமைச்சர் நேரில் ஆய்வு
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னையில், இன்று பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஆய்வு :
சென்னை, நொச்சிக்குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.
அதனால்தான், வாரம் தோறும் வீடுகளில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
32 லட்சம் பேர் பயன் :
ஆகஸ்டு 5-ந் தேதி தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் “மக்களை தேடி மருத்துவம்” என்று ஒரு திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் இதுவரை 32 லட்சத்து 36 ஆயிரத்து 622 பேர் பயன் அடைந்துள்ளனர்.
அந்த திட்டத்தின்படி, பயனாளிகளை கண்டறிவதற்கு வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணி ஒரு பயன் உள்ள திட்டமாக அமையும்.
பல்வேறு வீடுகளில் கேட்டு வருகிற போது ஒரு பெண் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது என்று கூறினார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து அளிக்க தயாராக உள்ளார்.
வீடு தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளோம். தவறு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்பதையும் கண்டறிய சொல்லி இருக்கிறோம்' என்றார்.
*