அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரஜினிகாந்த்

By 
mm11

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து வீட்டிற்கு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வருகை தந்துள்ளார்.

பிரபல சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும்,புலிவால் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி என தெரிவித்துள்ளார்.
 

Share this story