முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் பி.சுசீலா இவரது பாடல் என்றென்றும் ரசிகர்களை மயக்கும். அந்த வகையில் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனையடு்த்து டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா இன்று (நவ.21) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பி.சுசீலாவிற்கு உடல் நிலை பாதிப்பு காரணமாக நடக்க முடியாததால் அவரது இருக்கைக்கே சென்று பட்டம் வழங்கி கவுரவித்தார்.
இதே போல இசை மேதை பி.எம்.சுந்தரத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டினார். அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2013 ஆம் ஆண்டு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக வேந்தர் முதல்வர் என்பதை கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்றைக்கு உள்ள நிலையை உணர்ந்து மனதார பாராட்டுகிறேன்.
கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும். அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.