சென்னையில், 9 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை..

By 
100011

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? அவை நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

விண்ணப்பித்த பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு முறையாக இருந்ததால் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் 9 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும். வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் நடக்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றனர். 

Share this story