சென்னையில், பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
சென்னையில், மெட்ரோ ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம்.
இதுபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.