தமிழகத்தில், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு?

By 
In Tamil Nadu, extension of curfew restrictions again

தமிழகத்தில், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் பேருக்கு பரவி வருகிறது. அதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வழிபாட்டுத்தலங்களும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை மூடப்படுகின்றன.

ஆலோசனை-அறிவிப்பு :

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால், அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரச் செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தடுப்பு நடைமுறைகள் :

இந்த கூட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் எடுத்துக் கூறினார்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய் தொற்று பரவலை வீடு வீடாக கண்காணிக்க, குழுக்கள் அமைத்து ஓரளவு பலன் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தும், கொரோனா பரவுவதும் ஒமைக்ரான் அதிகரிப்பதும் இன்னும் குறையவில்லை. 

எனவே, பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றப்படுவதை ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பண்டிகை காலம் :

இதேபோல் ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காணும் பொங்கல் தினத்தன்று சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம் என்பதால், அதற்கு எந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

வருகிற ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கலாமா? மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பஸ் போக்குவரத்து சேவையை நிறுத்தலாமா? சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் வருகைக்கு தடை விதிப்பது, பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிப்பது, 

கடற்கரையில் பொது மக்களுக்கான கட்டுப்பாடுகளை நீட்டிப்பது போன்ற பல்வேறு விசயங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
*

Share this story