தமிழகத்தில், இன்று 3 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில், மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப்.6) நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.
வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை :
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில், இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மழை அளவை பொறுத்தவரை, கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
10-ந்தேதி :
வரும் 10-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.