2 டோஸ் தடுப்பூசியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லையா? : மத்திய அரசு புதிய முடிவு
ஒமைக்ரான் வைரசின் அபாயத்தை தடுக்க, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டுக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென கொரோனா உருமாற்றத்தை கண்காணிக்கும் இந்திய கூட்டமைப்பு கூறியுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி, ஒமைக்ரானை முழுமையாக எதிர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்றும், ஒமைக்ரானை எதிர்கொள்ள பூஸ்டர் ஊசி அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிபுணர் குழு பரிந்துரைத்தால், பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது :
கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் அல்லது குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்த எந்த ஒரு முடிவும், இந்த விஷயத்தை கவனிக்கும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கண்டிப்பாக எடுக்கப்படும்.
இந்த முடிவை அவசரப்படுத்தவோ, அரசியலாக்கவோ முடியாது. இது தூய அறிவியல் மற்றும் அறிவின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தொற்று நோயின் தொடக்கத்தில், மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தினோம். கடந்த 2 ஆண்டுகளில், துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒருவர் தடுப்பூசியில் ஆராய்ச்சி செய்தால், ஒப்புதல் பெற 3 வருடங்கள் ஆகும். நாங்கள் அந்த விதிகளை அகற்றினோம். ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு வருடத்திற்குள் தடுப்பூசியை பெற்றோம்' என்றார்.
*