நடிகர் விஜய் வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் : ஐகோர்ட் இன்று உத்தரவு
நடிகர் விஜய், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.
அறிவுரை :
நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது.
இதையடுத்து, சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது.
இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், 'நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தை நாடியதற்காக, அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.
மற்றவர்களைப்போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது.
மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில், இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்காத நிலையில், தன்னை மட்டும் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது' என தெரிவிக்கப்பட்டது.
அரசுக்கு நோட்டீஸ் :
இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.