செல்பி மோகத்தால், எம்பிபிஎஸ் மாணவி பலியான பரிதாபம்..
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நேஹா அர்சி. 22 வயதான நேஹா மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், நேஹா தனது சகோதரன் சவுரவ் உடன் நேற்று மாலை 7.30 மணியளவில், தனது வீட்டிற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார்.
நடைபயிற்சி மேற்கொண்ட பின்னர் மேம்பாலத்தின் சுவர் மீது ஏறி நேஹா அமர்ந்துள்ளார். மேலும், தனது சகோதரனிடம் எதேனும் தின்பண்டம் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். இதனைதொடர்ந்து, சவுரவ் தனது சகோதரிக்கு தின்பண்டம் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, மேம்பாலத்தில் இருந்தவாறு, செல்பி எடுக்க நினைத்த நேஹா மேம்பால சுவர் மீது ஏறி நின்றுள்ளார். சுவர் மீது ஏறி நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நேஹா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில், நேஹாவிற்கு படுகாயம் ஏற்பட்டது. மேம்பாலத்தில் இருந்து விழுந்த நேஹாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நேஹாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதனால், நேஹாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
செல்பி மோகத்தால் புகைப்படம் எடுக்க முயன்றபோது, மேம்பாலத்தில் இருந்து தவறி விழந்த எம்.பி.பி.எஸ். மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.