நிபா வைரஸ் தொற்று..மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது : தமிழக சுகாதாரத்துறை
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்ப்பில் இருந்த 17 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், பழூர், நாயர்குழி, கூலிமாட் மற்றும் புதியதாம் வார்டுகளும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அறிவுறுத்தல் :
காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வைரஸ் தொற்றின் ஆரம்ப தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கேரளாவில், நிபா வைரஸ் பரவல் எதிரொலியை ஒட்டி, தமிழக எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களில், கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அச்சப்படத் தேவையில்லை :
புதிய வைரஸ் கண்டறியப்பட்டால், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை.
கொரோனாவோ, நிபாவோ மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் அனைத்து காய்ச்சல் பாதிப்புகளையும் கண்காணித்து வருகிறோம்' என்றார்.