டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது : நாசவேலை முறியடிப்பு
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, நாடு முழுவதும் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக, தேடுதல் வேட்டைகளையும் நடத்தி வருகின்றனர்.
கைது :
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியின் லட்சுமி நகர் அருகே ரமேஷ் பார்க் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவனது பெயர் முகமது அஷ்ரப் என்கிற அலி என்பது தெரிய வந்தது. இவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன். அவன் போலி இந்திய அடையாள அட்டையுடன் டெல்லியில் தங்கி இருந்துள்ளான்.
அவனிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 60 தோட்டாக்கள், ஒரு கையெறி குண்டு, 2 பிஸ்டல் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
முறியடிப்பு :
நவராத்திரி விழா தொடங்கி உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவன் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிகிறது. தற்போது, பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளதால், நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.