'பெகாசஸ்' ஒட்டுக்கேட்பு விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு-விசாரணை
பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸ் உளவு மென்பொருளை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்தும் விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது.
ஒட்டுக்கேட்பு :
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
புதிய மனு :
இந்நிலையில், பெகாசஸ் உளவு மென் பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, 'இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.
கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.