கொடநாடு பங்களாவில், ஆதாரங்களை திரட்டிய போலீசார்..மேலும், அதிரடி விசாரணை..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
5 தனிப்படை போலீசார் :
இது தொடர்பான வழக்கில் சயானிடம் மறுவிசாரணை, கனகராஜ் சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் அதிரடி விசாரணைகளால், தற்போது வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசாரும் தனித்தனி குழுவாக பிரிந்து, இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள், அரசு தரப்பு சாட்சிகளில் இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், என பலரிடமும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதாரங்களை திரட்டினர் :
இந்நிலையில், நே
ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி, எஸ்.பி. ஆஷிஷ்ராவத் தலைமையிலான அதிகாரிகள் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
பின்னர், அங்கிருந்து கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்ற ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் அந்த பங்களா முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது கொலை நடந்த 8-வது கேட் பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து, காவலாளி கொலை செய்யப்பட்டது எப்படி? எவ்வாறு கொல்லப்பட்டார்? என பல கோணத்தில் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், காயம் அடைந்த கிருஷ்ணபகதூர் தற்போது எங்கு உள்ளார்? என்பது குறித்து விசாரித்து உள்ளனர்.
தொடர்ந்து பங்களாவிற்குள் சென்று கொள்ளை சம்பவம் அரங்கேறிய அறை ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதில் இருந்த பொருட்கள் என்ன என்பது குறித்தும், கொலையாளிகள் எந்த கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தனர்? என எஸ்டேட் மேலாளரிடம் விசாரித்தனர்.
மேலும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சென்றும் அதிகாரிகளில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
பங்களாவில் உள்ள ஜெனரேட்டர் அறை, சி.சி.டி.வி.கேமிராக்கள் மெயின் அறை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஜெனரேட்டர் அறையில் சோதனை மேற்கொண்டபோது, கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அன்றைய தினம் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை. அதற்கு என நியமிக்கப்பட்ட ஊழியர் அன்றைய தினம் எங்கே சென்றார். யார்? அவரை ஜெனரேட்டரை இயக்க வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன், பங்களாவில் இருந்து வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டினர்.
அதிரடி விசாரணை :
கொள்ளை சம்பவம் நடந்தபோது, பங்களாவில் மர வேலைகளும், சிறு, சிறு கட்டிட வேலைகளும் நடந்து வந்துள்ளன. இந்த வேலைகளில் அதிகமாக கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியை சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், கோத்தகிரியில் உள்ள ஆசாரிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். சுமார் 3½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையை முடித்து கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே கொடநாடு பங்களாவில் வேலை பார்த்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரிப்பதற்காக ஒரு தனிப்படை போலீசார் கூடலூருக்கு விரைந்தனர்.
அவர்கள், அங்கு பங்களாவில் வேலை பார்த்த கட்டிட தொழிலாளிகள் மற்றும் மரவேலைகளில் ஈடுபட்ட தொழிலாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது கொள்ளை நடந்த சம்பவம் குறித்தும், அவர்களுக்கு தெரிந்த தகவல்களை போலீசார் பெற்றக் கொண்டனர்.
அடுத்த கட்டமாக கோத்தகிரி துணைமின் நிலையத்தில் கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்தபோது பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது, பணிபுரிந்த பலரும் மாறுதலாகி வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
தற்போது, அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தனி அலுவலகம் :
கொடநாடு கொலை வழக்கில், கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காக ஊட்டியில் உள்ள பழைய எஸ்.பி. அலுவலகத்தில் தனி அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் தான், வழக்கு சம்பந்தமாக பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரக்கூடிய அடுத்த மாதம் 1-ந் தேதிக்கு முன்னதாக முடிக்க திட்டமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.