ஷாருக்கான் மகன், மேலும் சில நாள் ஜெயிலில் இருக்கவேண்டிய நிலைமை..
மும்பை அருகே கடந்த 3-ந் தேதி சொகுசு கப்பலில் நடுக்கடலில் விருந்து நடந்தது.
அதில், போதை மருந்து பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து, போதை மருந்து தடுப்பு பிரிவினர் ரகசியமாக சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அங்கு கொக்கைன் போதை பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. எனவே, அதில் பங்கேற்றவர்களை கைது செய்தார்கள்.
அதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர்.
அவர் உள்ளிட்ட 8 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மும்பை போதை மருந்து தடுப்புப் பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இது விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் வழங்கப்படவில்லை.
இது சம்பந்தமாக, போதை மருந்து தடுப்பு பிரிவு தரப்பில் பதில் அறிக்கை கேட்கப்பட்டது. இன்று அதை தாக்கல் செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால், போதை மருந்து தடுப்பு பிரிவினர் பதில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதற்கு அவகாசம் கேட்டனர். இதனால், 13-ந் தேதி வரை வழக்கை தள்ளி வைத்தனர்.
அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, ஆர்யன்கானுக்கு இன்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.
அவர், மேலும் 2 நாட்கள் ஜெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.