பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்; 4 பேர் கைது..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். அவரது மனைவி முத்துச்சுடலி.
இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளான நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு வாரத்தில் மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் முத்து சுடலிக்கு வேறு சில பிரச்சினைகள் ஏற்பட்டு, சேத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற பொழுது அங்கு உள்ள மருத்துவர்கள் குழந்தையை எங்கே ஏன் பால் கொடுக்காமல் இருந்தீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில் முன்னுக்கு பின் முரணாக பேசிய முத்துச்சுடலி தன் குழந்தை வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் குழந்தை இறந்து விட்டாதாக கூறியுள்ளார். முத்து சுடலியின் பேச்சில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உயிரிழந்த குழந்தையின் பிரேதத்தை எங்கே புதைத்தீர்கள் என துருவி துருவி விசாரணை செய்ததில் குழந்தை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இத்தகவல் விருதுநகர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி திருப்பதிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை பெற்ற தாய் முத்துச்சுடலி மூகவூர் பகுதியைச் சேர்ந்த தரகர் ராஜேஸ்வரி மற்றும் தென்காசி மாவட்டம் பெருமத்தூர் பகுதியை சேர்ந்த ரேவதி ஆகியோர் மூலம் ஈரோடு மாவட்டம் மாணிக்பாளையம் பகுதியை சேர்ந்த அசினா (வயது35) தம்பிராஜ் தம்பதிக்கு கடந்த 25ம் தேதி மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக, சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.