திருவண்ணாமலையில் பேருந்தும், காரும் மோதி கோர விபத்து: 7 பேர் பரிதாப பலி..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காரும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த மேல் செங்கம் காவல்துறையினர் மற்றும் செங்கம் தீயணைப்பு துறையினர் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை காரில் இருந்து மீட்டெடுத்து பலத்த காயம் அடைந்த 6 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனுமதிக்க ஆறு பேரில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். செங்கம் அருகே காரும் அரசு பேருந்து நிலையம் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கய காரில் சென்ற 11 பேரில் 8 பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் ஓசூரில் உள்ள தனியார் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மேல் செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே பகுதியில் கடந்த வாரம் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். தற்போது மீண்டுமொரு கோர சம்பவம் அதே பகுதியில் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.