1-ந்தேதி முதல், மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி : தமிழக சுகாதாரத் துறை ஏற்பாடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது. ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலை கல்லூரியில் சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி துவக்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது.
இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சரும் இவ்வளவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை.
ஆனால், நம் மாநில முதலமைச்சர் கட்டுமான தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும், தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக துவக்கி வைத்திருக்கிறார்.
சென்னை மாவட்டத்தில் 90.11% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும், நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, கல்லூரிகளுக்கே வந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.