கிஷோர் கே.சாமி கைது : மருது அழகுராஜ் கடும் கண்டனம்
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் கிஷோர் கே. சுவாமி, நவம்பர் மாதத் துவக்கத்தில் மழை, வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
இது குறித்து கிஷோர் கே. சுவாமி மீது இ.பி.கோ. 153, 294 B, 505 -1, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இது குறித்த விசாரணைக்காக ஆஜராகும்படி, நவம்பர் மாதத்தில் நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கிஷோர் கே. சுவாமி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு :
'ஐட்டம் என்றெல்லாம் தரம் தாழ்ந்து பிறரை விமர்சிக்கும் உரிமை, தங்களுக்கு மட்டுமே உண்டு என நினைக்கும் ஆளும் திமுக, தங்களை விமர்சிக்கும் சமூக செயல்பாட்டாளர்களை தொடர்ந்து வலை வீசி பிடித்து சிறையில் அடைக்கிறது.
இது சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகார போக்காகும்' என அதிமுக செய்தித்தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் குறிப்பிட்டுள்ளார்.
*