சென்னையில் 25-ந்தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலம் : முழு விவரம்..

By 
thirukudai

இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வெங்கடேசப் பெருமாள் கருட சேவைக்கு, தமிழ்நாட்டு பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. 

இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்ய உள்ளது. 

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 25-ந்தேதி காலை 10 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது. 

26-ந்தேதி காலை 6 மணி, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், பெரம்பூர் அகரம் சந்திப்பு திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் சென்றடைகிறது. 27-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு பாடி, முகப்பேர், அம்பத்தூர், அத்திப்பட்டு, திருமுல்லைவாயல் சென்றடைகிறது. 

28-ந்தேதி காலை 6 மணிக்கு, ஆவடி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் வழியாக செல்கிறது. 

29-ந்தேதி திருப்பாச்சூர் கனகம்மாசத்திரம் வழியாக கீழ் திருப்பதி செல்கிறது. 

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. 30-ந்தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். 

அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. 

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. 

திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோவில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பஜனை, பிரபந்தக் குழுவினர் மற்றும் கலை நிகழ்ச்சிக் குழுக்கள் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். 

இதுகுறித்த விவரங்களுக்கு 7373099562, 7373099545 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share this story